ஈரானுக்கு பாதையை திறந்த பாக்கிஸ்தான்: எப்படி அமெரிக்காவுக்கு செக் வைத்தது ?
வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி, ஈரானுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் ஆறு புதிய தரைவழி வர்த்தக வழித்தடங்களை அதிரடியாகத் திறந்துவிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாகக் கடற்படை மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. ஈரானின் வருமானத்தை முடக்கவும், அந்நாட்டைப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்கவும் டிரம்ப் நிர்வாகம் ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ளது.
பாகிஸ்தான் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி (Transit of Goods through Territory of Pakistan Order 2026), குவாடர் முதல் கப்ட் (Gabd) வரையிலான குறுகிய வழித்தடம் உட்பட மொத்தம் ஆறு முக்கிய பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்கள் மூலம் ஈரானுக்கான சரக்கு போக்குவரத்து நேரம் 87 சதவீதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தடையைத் தகர்த்து பாகிஸ்தான் எடுத்துள்ள இந்த நகர்வு, வாஷிங்டன் மற்றும் இஸ்லாமாபாத் இடையே கடுமையான ராஜதந்திர மோதல்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர்ச் சூழலால் பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கவலை தெரிவித்துள்ளார். ஒருபுறம் அமெரிக்காவுடன் இணக்கமாக இருப்பது போலக் காட்டிக்கொண்டாலும், மறுபுறம் ஈரானுடன் வர்த்தக உறவை வலுப்படுத்துவதன் மூலம் பாகிஸ்தான் ஒரு இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஈரானுக்கு பாகிஸ்தான் கொடுத்துள்ள இந்த "லைஃப்-லைன்" (Lifeline), மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் சமன்பாடுகளையே மாற்றியமைக்கும் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

No comments: